உணவெனும் தெய்வம்


பசித்தவனுக்கு உணவே தெய்வம் அல்லது பிறிதொன்றும் இல்லை. வறுமை குறித்தோ பஞ்சம் குறித்தோ பல நாள் பட்டினியாய் இருப்பை கண்டு எவன் ஒருவன் உணவு ஈந்த போதும் , அவ்வறியோர் அவ் உணவே கடவுளாகவும் அவ்வுணவு ஈன்தோரை கடவுள் விளக்கமாகவும் மிகுந்த கருணை பார்வையுடனும் நன்றி உணர்தலோடும் தெண்டனிட்டு வணங்குவதை காணும் போது உணவுதான் கடவுள் என்ற எண்ணம் நம்மிடம் எழுவதை காணலாம். இது குறிதன்றோ 'ஈத்துவக்கும் இன்பம் சிறந்தது' என்று நம்மவர்கள் போற்றி மகிழ்ந்தனர்.
அன்றியும், வாடி வருந்தும் வறியோரிடம் சென்று - "உங்கள் பசி பட்டினி யாவையும் இறைவன் போக்குவார், அவன் திரு நாமத்தை இடைவிடாது ஜெபியுங்கள் "- என பசித்திருப்பவனிடம் இறை இயலை பற்றி பேசுவோனை பார்த்து மிகுந்த அருவருப்பும் பெருத்த கோபமும் கொண்டு அவனையும் அவன் எடுத்துக்காட்டிய இறைவனிடமும் தீரா பகை கொண்டு அலைவார்.
நிலைமை இவ்வாறு இருக்க நம்முடைய மத நூல்களும் திருக்குறள் முதலாய வாழ்வியல் நூல்களும், வாயின்பதை விட செவி இன்பமே சிறந்தது என கூறும், இதனையே நம் தெய்வப்புலவர் ,
"செவியுணவின் சுவையறியா வாயுனவு மாக்கள்
அவியினும் வாழினும் ஏன்"
என கடிந்துரைப்பதையும் , கேள்வி இன்பம் உணவை விட மேலானது என்று உயர்த்திக் கூறுங்கால் எது உண்மை என்ற வினா நம்மிடையே எழுகிறது.

மேற் குறித்த கருத்துக்கள் யாவும் லட்சிய மாந்தருக்காக கூறப்பட்டதே அல்லால் நம் போன்ற மனிதருக்கல்ல என்று உய்த்துணர வேண்டும். இவ்வாறு அரிதின் அமைந்த லட்சிய மாந்தர்கள் அரிதாயும் அருகி வருதல் கண்டு உலகில் பெரும்பான்மையோர் உணவே கடவுள் என்று உழல்வது இயல்பே!

ஏன் இவ்வாறு நம்மவர்கள் அலைகிறார்கள் என்று வினவுங்கால் - பசியின் கொடுமை - பசி வந்திட தானம் கல்வி குடிபிறப்பு முதலாய பல்வகை குணங்களும் அழிந்து போம். இஃதயே மணிமேகலை,


"......குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்....."

என்று படக்கட்சியாய் நம் கண் முன் விரிக்கும்.

அம்மாட்டு நில்லாமல் தெய்வக் கண்ணிகையம் மணிமேகலை தன்திருக்கரத்தினால் அமுத சுரபி எனும் வற்றாத சோற்றுப் பெட்டகத்தினை வந்தோர் வறியொருக்கெல்லம் வாரி ஈந்து வயிறு குளிர வைத்தாள்.

'பசித்திரு' என்று உபதேசித்த நம் அருமை வள்ளலார் வாடிய பயிரைகண்டபோதெல்லாம் வாடியதோடு மட்டுமன்றி சத்திய ஞான தரும சபைதனில்எக்காலமும் இடைவிடாது எரியும் அடுப்பமைத்து பசிப்பிணி நீக்கினார்.
பசி போக்கி விருந்தோம்பும் பண்டை நாகரிக பண்பு மாந்தர் மாட்டு நில்லாமல் காட்டு வீட்டு விலங்கினகளுக்கும் பரவி நின்றது. அஃதொரு அறச் செயலாகவும் அன்றாடக் கடமையாகவும் கருதப்பட்டது.
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே
என்னும் திருமூலர் வாக்கு இனிது விளக்கும்.

ஆனால் இன்றோ விருந்து புறத்தக்க தானுண்ணும் நடையும், விருந்தினர் வரக்கண்டு வாடுதலும் , செல் விருந்தினர் மீளவும் வாராத உபசரிப்பும், வரு விருந்தினரை வரவேற்காத பண்புமே நாகரிகம் என கருதும் போக்கு உள்ளது.

இவ்வாறு உலகம் தன்னியல்பில் கெட்டு நிற்கும் நிலை வரும் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம்மவர்களுக்கு தெரிந்தோ என்னவோ ,
"செல்வத்து பயனே ஈதல் , துய்போம் ஏனின் தப்புன பலவே" என எச்சரித்து சென்றதை நினைவில் கொண்டு ஈத்துவக்கும் இன்பத்தில் திளைத்து மகிழ்வோம்.